இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

நீரிழிவு உள்ளவர்களுக்கு மூலிகை மருந்து


இந்திய மக்களை குறிப்பாக தென்னிந்திய மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு. இந்திய மக்கள் தொகையில் தற்பொழுது 63 சதவிகிதமாக உள்ள நீரிழிவு நோயாளியின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நம் உண்ணும் உணவு முறையே. நகர வாழ்க்கையின் தாக்கத்தினாலும் போதிய உடற் பயிற்சியின்மையினாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் மூலிகைகளையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மஞ்சள்
கிருமி நாசினியாகவும், உடல் தேற்றியாகவும், ஜலதோஷம், காய்ச்சல் முதல் புற்று நோய் வரை அனைத்து நோய்களிலும் பயனளிப்பதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ள மஞ்சளானது நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. நெல்லிவற்றலுடன் சேர்ந்து வழங்கும்போது சர்க்கரை நோயில் அதிக பலன் அளிப்பதுடன், நீண்ட கால பின் விளைவுகளைத் தடுத்து சிறுநீரக செயலிழப்பு, அதிக ரத்தக் கொழுப்பு ஆகியவற்றையும் தடுக்கிறது.
நாவல்
நாவலின் பட்டை, பழம், விதை ஆகிய மூன்றும் பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் நீரிழிவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக நாவல் விதை மற்றும் விதையின் மேல்தோல் ஆகியவை இன்சுலின் அளவை அதிகரிப்பதை நவீன ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மேலும் சர்க்கரை நோயில் உண்டாகும் சிறுநீரக, கல்லீரல் மாற்றங்களை நாவல் விதை சரி செய்கிறது.
பாகற்காய்
பாகல் இலை, காய், விதைகளில் "தாவர இன்சுலின்" என்ற புரதச் சத்து உள்ளது. இது இன்சலின் போல் செயல்படுவதாகவும், இன்சுலின் சார்ந்த மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயர்களுக்கும் பயன்படுவதாகவும், கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. பாகற்காயானது ரத்தத்தில் சர்க்கரை அளவை 50% வரை குறைக்கிறது. இது சர்க்கரை விழித்திரை நோயைத் தடுக்கிறது. நரம்புகளின் பாதிப்பையும் சரி செய்கிறது. சர்க்கரையிலிருந்து கொழுப்பு உண்டாவதை அதிகரிப்பதாகவும், கொழுப்பில் இருந்து சர்க்கரை உருவாகி ரத்தத்தில் கலப்பதைக் குறைக்கிறது.
வெந்தயம்
வெந்தையத்தில் காணப்படும் "ட்ரைகோனெல்லின்" அதிகரித்த ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, கொலஸ்டிராலையும் 25% அளவு குறைக்கிறது. எனவே மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது. குடலில் சர்க்கரை ஊறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்கிறது.
ஆவாரை
ஆவாரையின் இலை, பூ, பட்டை, வேர் என ஐந்து உறுப்புகளுமே நீரிழிவில் பயன்படுகின்றன. அதிக அளவில், அடிக்கடி சிறுநீர் போவதைக் குறைப்பதால், காவிரி நீரையும், கடல் நீரையும் வற்றச் செய்யும் எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நவீன ஆய்வுகளில் ஆவாரை சர்க்கரை, அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி, ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதால் இதயத்தை பாதுகாப்பதாகவும், ஹீமோ குளோபின் அளவு, தரம் ஆகியவற்றை அதிகரிப்பதாகவும் நிரூபித்துள்ளனர்.
சிறுகுறிஞ்சான்
"சர்க்கரைக் கொல்லி"யாகிய சிறுகுறிஞ்சான் கணையத்தில் இன்சுலின் சுரப்பிக்கும் பீட்டா செல்களைப் புதுப்பித்து அவற்றின் எண்ணிக்கையை இரு மடங்காக்குகிறது. அதனால் இயற்கையாகவே இன்சுலின் சுரப்பு அதிகமாவதாலும், குடலில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைப்பதாலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் கொலஸ்டிரால், டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவைக் குறைப்பது மட்டுமன்றி, நல்ல கொழுப்பான H.D.L. ன் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. மாரடைப்புக்குக் காரணமாகும் ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதைத் தடுக்கிறது.
கடலழிஞ்சில்
பொன் குறண்டி" எனப்படும் இம் மூலிகை சமீபகாலமாக சர்க்கரை நோய்க்கான ஆய்வுகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகிறது. அமெரிக்காவில் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் இம் மூலிகை ரத்த சர்க்கரை அளவை 29 சதவீதம் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நாம் உண்ணும் உணவு குளுகோஸாக மாறும் வேகத்தைக் குறைப்பதாகவும் அதனால் நோயர்களுக்கு இன்சுலின் தேவை குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய் மற்றும் அதன் பிற அறிகுறிகளான உடல்வலி, தசைவலி ஆகியவற்றுக்காக "கடலழிஞ்சில்" நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சீந்தில்
நலவாழ்வை நீட்டிக்கும் காய கற்ப மூலிகை, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்திக்குக் காரணமான "இம்யூனோகுளோபுலின் - ஜி" - ன் அளவை, சீந்தில் அதிகப்படுத்துகிறது. கொலஸ்டிராலைக் குறைக்கிறது. இது சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் எடைக் குறைவைத் தடுக்கிறது.
வில்வம்
வில்வ இலையிலிருந்து கிடைக்கும் பாஸ்பேட் சர்க்கரை நோயைக் குறைப்பதோடு, நோயர்களின் திசுக்களுக்கு அதிக பிராணவாயு கிடைக்கச் செய்வதன் மூலம் சோர்வடையாமல் காக்கிறது. சர்க்கரை நோயின் காரணமாக ஏற்படும் இதய ரத்தக் குழாய் அடைப்பைத் தடுப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. சிவனுக்குரிய மூலிகையாகக் கருதப்படும் வில்வம் அனைத்து நோய்களையும் தடுக்கும் மாமருந்தாக நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரைக் கொல்லி மூலிகைகள்
மேலும் வேம்பு, வேங்கை, கொன்றை, மருது, கறிவேப்பிலை, கடுகு ரோகிணி ஆகிய மூலிகைகளும் சர்க்கரை நோயில் பலன் அளிப்பதை தற்கால ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இத்தகைய சிறப்புகள் உடைய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வில்வம் மாத்திரை, சீந்தில் மாத்திரை, கடலழிஞ்சில் மாத்திரை, நாவல்மாத்திரை, நீரிழிவு சூரணம், ஆவாரை, குடிநீர், திரிபலா கற்பம், சிறுகுறிஞ்சான் சூரணம் போன்ற பல மருந்துகளில் ஏற்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி எடுத்து வரலாம். மூலிகை மருந்துகள், உணவுச் சீரமைப்பு, தக்க உடற்பயிற்சி, ஆகிய மும்மூர்த்திகள் உதவியுடன் சர்க்கரைநோயை வெல்ல நிச்சயம் முடியும்

நாடி வகைகள், பார்க்கும் விதம் நோய் கணிப்பு முறைகள்

நாடி வகைகள், பார்க்கும் விதம்
நோய் கணிப்பு முறைகள்:
ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் முழுவதுமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது மூலம் இதனைக் கண்டறிகிறார்கள். நாடி பார்ப்பது என்பது சித் மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, சிறப்பும் கூட. அப்படிப்பட்ட நாடி பற்றி தெரிந்து கொள்வோம்.
நாடி எப்படி உண்டாகிறது?
நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செய்லடுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான். அப்படி இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கு ஏற்ப உருவாவதுதான் நாடி. அதாவது இதயத் துடிப்பும் நாடியும் ஒன்றையொன்று ஒத்திருக்கும்.
நாடி பார்க்கும் முறை:
மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே மூன்று விரல்களால் (நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல்) ஒரே நேரத்தில் மெதுவாக அழுத்தி நாடி பார்க்க வேண்டும். பிறகு, விரல்களை மாறி மாறி அழுத்தியும், தளர்த்தியும் பார்த்தால் நாடியின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
நாடி நிதானம்;
மேலே சொன்னபடி நாடி பார்க்கும் போது ஆள்காட்டி விரல் மூலம் கீழ்வாத நாடி, நடு விரல் மூலம் கீழ் பித்த நாடி, மோதிர விரல் மூலம் கீழ் சிலேத்தும நாடி ஆகியவற்றின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இவை தவிர பூத நாடி, குரு நாடி என இரு நாடிகள் உண்டு. பெருவிரல் மற்றும் சுண்டு விரல் மூலம் பூத நாடியையும், ஐந்து விரல்கள் மூலம் குரு நாடியையும் உணரலாம்.
எவ்வித உடல் நலக் குறைபாடும் இல்லாத ஒருவருக்கு நாடி பார்த்தால், அவருடைய வாத நாடி குயில் மாதிரியும் அன்னம் மாதிரியும் நடக்கும். பித்த நாடி ஆமை மாதிரியும், அட்டை மாதிரியும், சிலேத்தும நாடி பாம்பு மாதிரியும், தவளை மாதிரியும் நடக்கும்.
ஆண்-பெண் நாடி பார்க்கும் முறை:
ஆண்களுக்கு வலக் கையிலும் பெண்களுக்கு இடக் கையிலும் நாடி பார்ப்பதுதான் சிறந்தது.
பத்துவகை நாடிகள்:
1.இடகலை நாடி எனப்படும் (வளி) வாத நாடி.
2. பிங்கலை எனப்படும் (அனல்) பித்த நாடி.
3. சுழிமுனை எனப்படும் ஐய நாடி
4. சிங்குவை எனப்படும் உள்நோக்கு நாடி
5. புருடன் எனப்படும் வலக் கண் நாடி.
6. காந்தாரி எனப்படும் இடக்கண் நாடி
7. அத்தி எனப்படும் வலச் செவி நாடி
8. சங்கினி எனப்படும் ஆண், பெண் குறி நாடி.
9. அலம்புடை எனப்படும் இடச் செவி நாடி.
10. குருநாடி எனப்படும் எரு வாயில் நாடி.
நாடி பார்க்கும் மாதங்கள்:
சித்திரை, வைகாசி-காலை (உதயம்)
ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை -நண்பகல்
மார்கழி, தை , மாசி - மாலை
ஆவணி, புரட்டாசி, பங்குனி - இரவு
உடலுறவு கொண்டவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நேரம் வாகனம் ஓட்டியதால் களைப்படைந்தவர்கள், வயிறு நிறைய சாப்பிட்டவர்கள், மழையில் நனைந்தவர்கள், அடிக்கடி விக்கல் எடுப்பவர்கள், நாட்டியம் ஆடியவர்கள், மூச்சுப் பயிற்சி செய்தவர்கள், எண்ணெய் தேய்த்துக் குளித்தவர்கள், பயந்த சுபாவம் உடையவர்கள், விஷம் சாப்பிட்டவர்கள், அதிகமாக கவலைப் படுபவர்கள், அதிகப் பசி உடையவர்கள், பூப்படையும் வயதில் உள்ள பெண்கள், அதிகமாகக் கோபப்படுவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், நோன்பு விரதம் இருப்பவர்கள் மற்றும் வேறு சிலருக்கும் தெளிவாக நாடி பார்க்க முடியாது.
நாடிகளின் தன்மை:
வாத நாடி
வாதம் அதிகமானால் உடல் முழுவதும் குத்தல் வலி இருக்கும். கை, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். கை கால்கள் முடங்கிப் போகலாம். குனிந்து நிமிர முடியாத படி அடிக்கடி மூச்சுப் பிடிப்பு ஏற்படும். வயிற்றுப் பொருமல் அதிகமாக இருக்கும். வயிற்றில் மந்தம் ஏற்பட்டு: சரியாகப் பசி எடுக்காது. மலச்சிக்கலும், சிறுநீர்க்கட்டும் ஏற்படும். வாய் புளிக்கும். அடிக்கடி பேதி ஆகும்.
அறிகுறிகள்:
உடல் குளிர்ச்சியாக இருக்கும். முகம், கண்விழி, பல், மலம் கறுமை நிறத்தில் இருக்கும். கண்ணில் நீர் வடியும். நாக்கு கறுத்து வறண்டு போகும். சிறுநீர் கறுத்தும், அளவி;ல் கொஞ்சமாகவும் வெளியாகும்.
பித்த நாடி
பித்தம் அதிகமானால் உடல் நடுக்கம் ஏற்படும். உடல் வறட்சி ஏற்பட்டு எரிச்சல் அதிகமாகும். மண்டைக்குடைச்சல், நாவறட்சி, வாய்க் கசப்பு, தாகம், விக்கல், வாந்தி, தலைக் கிறுகிறுப்பு,காது அடைப்பு, அயர்ச்சி, சோம்பல்,நெஞ்செரிச்சல், மந்தம், குளிர்க்காய்ச்சல், ரத்த சோகை, மஞ்சள் காமாலை, மயக்கம் உள்ளிட்ட வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். கண் பார்வை தெளிவில்லாமல் இருக்கும். கண்கள் உள்வாங்கி அடிக்கடி பார்வை இருண்டு போகும். சிறுநீர் மஞ்சள் நிறமாகவும் சில சமயத்தில் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
அறிகுறிகள்:
உடல் சூடாகவும், முகம் கண்விழி, நாக்கு, பல், மலம் ஆகியவை சிவப்பாகவும் இருக்கும். சிறுநீர் மஞ்களாகவும் சில சமயங்களில் சிவப்பாகவும் வெளியாகும்.
சிலேத்தும நாடி:
சிலேத்துவம் அதிகரித்தால் உடல் கரையும், வற்றும், வெளுக்கும், குளிர்ந்து நடுங்கும், உணவு சாப்பிடப் பிடிக்காது. விக்கல், வாந்தி, இருமல், மேல் மூச்சு, வியர்வை போன்றவை இருக்கும். நெஞ்சு மற்றும் விலாப்பகுதியில் வலி இருக்கும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இருமினால் ரத்தம் வெளியாகலாம். சிறுநீர் குறைவாகப் போகும்.
உடல் அறிகுறிகள்:
உடல் அடிக்கடி வியர்க்கும். முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும். கண்களில் பீளை கட்டும்.
மனித உடலில் உள்ள மொத்த நாடிகள்:
தலையில் 15000
கண்களில் 4000
செவியில் 3300
மூக்கில் 3380
பிடரியில் 6000
கண்டத்தில் 5000
கைகளில் 3000
முண்டத்தில் 2170
இடையின் கீழ் 8000
விரல்களில் 3000
லிங்கத்தில் 7000
மூலத்தில் 5000
சந்துகளில் 2000
பாதத்தில் 5150
மொத்தம் 72000
நாடி துடிப்பது நலம் நாடி..... நாடி... அதை நாடு... இல்லா விட்டால் ஏது இந்த மனித கூடு? இந்த மனிதக் கூட்டுக்கு ஆதாரமானவை அண்டவெளியில் அமைதுள்ள ஐம்பூதங்களே. அண்டவெளியில் உள்ள ஐம்பூதங்களே உடலாகிய உயிர் குடிகொண்ட பிண்ட வெளியிலும் நிறைந்துள்ளன. அவற்றில் இருந்தே வாதம், பித்தம், கபமாகிய நாடிகள் தோன்றுகின்றன என்பதையும் இந்த நாடிகள் பற்றியும் சென்ற பதிவில் ஒரு பருந்துப் பார்வைக் பார்த்தோம். ஆமாம் அந்த நாடி எங்கு உற்பத்தி ஆகிறது? எங்கு செல்கிறது? அதன் நிறம் என்ன? குணம் என்ன? நடை என்ன? 
தொப்புளுக்கு கீழே 4 அங்குல அகலமும், 2 அங்குல நீளமும் உடைய பவளம் போன்ற செந்நிறத்தில், முளை போன்ற தோற்றமுடைய ஒரு இடமே நாடிகளுக்கு மூலஸ்தானம். அதிலிருந்து கிளம்பும் நாடிகளே இலையில் காணலாகும் நரம்புகள் போல பல கிளைகளாகப் பிரிந்து மிகவும் மென்மையாக உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்கின்றன. இவை உடலில் உள்ள ஏழு வகை தாதுக்களில் இடைப்புகுந்து செல்லும் போது அவற்றின் நிறங்களையும் அடைகின்றன. இவற்றுள் சில பருமனாகவும், சில மெல்லியதாகவும், சில முடிச்சுள்ளவையாகவும், சில அடிப்பக்கம் பருத்தும் மேலே வர வர மெலிந்தும், இருக்கின்றன. இவை எல்லாம் ஒன்று சேர்ந்தும் பல திசைகளில் பிரிந்து நுன்மையான நுணிகளை உடையனவாகவும் எல்லாம் ஓட்டை உடையனவாகவும் இருக்கும். நாடி என்பது இரத்தக்குழாய்களில் உண்டாகும் துடிப்புகளின் எண்ணிக்கையோ, தாள அமைதியோ, அழுத்தமோ மட்டுமல்ல. அது ஒவ்வொரு உடம்பிலும் செயல்படும் உயிரின் முழு இயக்கம். இவை உடம்பின் ஒவ்வோரு அணுவிலும் செயல்படுகிறது. இதனாலேயே,
”நாடியென்றால் நாடியல்ல; நரம்பில் தானே,
நலமாகத் துடிக்கின்ற துடி தானுமல்ல, 
நாடி என்றால் வாத பித்த சிலேற்பணமுமல்ல, 
நாடி எழுபத்தீராயிரந் தானுமல்ல,
நாடி என்றால் அண்டரண்டமெல்லாம்நாடி 
எழுவகைத் தோற்றத்து உள்ளாய்
நின்றநாடிய துயராய்ந்து பார்த்தாரானால் 
நாடியுறும் பொருள் தெரிந்து நாடுவாரே” 
என்று சதக நாடி நூல் உரைக்கும். இதயம் விரியவும் சுருங்கவும் செய்யும் போது நாடி நரம்புகளும் விரியவும் சுருங்கவும் செய்யும் நாடித்துடிப்புச் சிறப்பாக இரத்தக் குழாய்களில் பத்து இடங்களில் வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் நாடியைப் பார்க்கும் இடங்கள் பத்தாக உள்ளன. அவையாவன கை, கண்டம், காலின் பெருவிரல், கணுக்கால், கண்ணிச்சுழி, ஆகியன. இவற்றில் கையைப் பார்ப்பதே துல்லியமான கணிப்புக்கு உதவும் இடமாகும். ஆணுக்கு வலக்கையிலும் பெண்ணுக்கு இடக்கையிலும் நாடித்துடிப்புச் சரியாக காணக்கூடும். நாடி பார்க்குமுன் நோயாளியின் கைவிரல்களை நெட்டை எடுத்துவிட்டு, ஒருமுறை உள்ளங்கையில் சூடு பறக்கத் தேய்த்த பின் மூன்று விரல்களால் அழுத்தியும், விட்டும் மாறி மாறிச் செய்யும் போது நாடித்துடிப்பின் வேறுபாடுகளை விரல்களால் நன்கு உணர முடியுமாம்.
துவாக நடையைத்தான் அன்ன நடை, மான் போன்ற துள்ளல் நடை, சிங்க நடை என்றெல்லாம் வர்ணனை செய்து பார்த்திருக்கிறோம். இரத்தக்குழாயில் ஓடும் குருதியின் நடையை வருணிக்கும் நம் சித்த வைத்தியர்களின் கற்பனைனையை எப்படி பாராட்டுவது. அதிலும் சிங்கம் போன்ற ஆண்களுக்கும் அன்னம் போன்ற பெண்களுக்கும் நடை வேறுபாடு உள்ளது போல ஆண்களுக்கும் பெண்களுக்கு நாடி நடையிலும் உள்ள வேறுபாட்டை அழகாக கூறியுள்ள திறம் எண்ணி எண்ணி வியக்கத் தக்கது. ஆண்களுக்கு வாத நாடி, கோழி போலவும், குயில் போலவும், அன்னம் போலவும் நடக்கும். பித்த நாடி, ஆமையைப் போலவும் அட்டையைப் அசைந்து அசைந்து நடக்குமாம். சிலேத்தும நாடி பாம்பு போல ஊர்ந்தும் தவளை போல குதித்தும் செல்லுமாம். பெண்களுக்கு வாதநாடி பாம்பு போலவும், பித்த நாடி தவளை போலவும், சிலேத்தும நாடி அன்னம் போலவும் நடக்குமாம்.
நாடியைப் பார்க்கும் நேரம் மாதங்களுக்கு ஏற்ப மாறுபடும். சித்திரை, வைகாசி மாதங்களில் அதிகாலையும் (உதயத்தில்), ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மதியமும், மார்கழி, தை, மாசி மாதங்களில் மாலையும், பங்குனி, புரட்டாசி, ஆவனி மாதங்களில் இரவும் நாடியைப் பாக்க வேண்டிய காலங்களாகும். நாடியைப் பார்க்க நாள் நட்சத்திரம் வேறு பார்க்க வேண்டுமா என்று நினைக்கக் கூடாது. எந்தெந்த மாதத்தில் எந்த நேரத்தில் பார்த்தால் நோய் அறிகுறியை மிகத்துல்லியமாக அறியலாம் என்று ஆய்ந்து சொன்ன அவர்களின் அறிவுக்கூர்மையைப் பார்க்க வேண்டுமல்லவா? பாடலைப் பார்க்கலாமா?
”சித்திரை வைகாசிக்குஞ் செழுங்கதிருப் பிற்பார்க்கஅத்தமாம் ஆனியாடி ஐப்பசி கார்த்திகைக்கும்மத்தியானத்திற் பார்க்க மார்கழி தைமாசிக்கும்வித்தகக் கதிரோன் மேற்கே வீழ்கும் வேளையிற் றான்பாரேதானது பங்குனிக்குந் தனது நல் ஆவனிக்கும்வானமாம் புரட்டாசிக்கும் அர்த்த ராத்திரியில் பார்க்கதேனென மூன்று நாடி தெளியவே காணும்”
இவை மட்டுமல்ல எப்போதெல்லாம் நாடிச் சோதனைச் செய்யத் தகுதியற்ற நேரம் என்றும் கூறியுள்ள அவர்களின் திறனை எத்துனைப் பாராட்டினாலும் தகாது. எண்ணெய்க் குளியல் செய்த பின்பு, உடல் ஈரமாக (நனைந்து) உள்ள போது, உணவு உண்ட உடனே, மது அருந்தியுள்ள போது, புகையிலை போன்றவை பயன்படுத்தியுள்ள போது, வேகமாக நடந்த பின்பு, வாதி, பேதி, விக்கல் போன்றவை உள்ள நேரத்தில், உடல் உறவு கொண்ட உடனே எல்லாம் நாடிச்சோதனை செய்தால் நாடியைச் சரியாகக் கணிக்க முடியாது. ஆங்கில மருத்துவத்தில் பொதுவாக வெள்ளை ஆடை அழகிகள் வந்து கண்களால் தன் கையில் கட்டிய கடிகாரத்தையும், கையால் நோயாளியின் கையையும் பிடித்து நாடியை எண்ணி எழுதிவிடுவர். அவ்வளவுதான்.
இங்கே சித்தர்கள் பாருங்கள். வயது, பாலுக்கு ஏற்ப நாடித் துடிப்பு மாறுவதைக் கணக்கிட்டுச் சொல்லியுள்ள பாங்கை. ஒரு நிமிடத்தில் நாடித் துடிக்கும் அளவு பிறந்த குழந்தைக்கு 70, அதுவும் சாதாரணமாக 100, உட்கார்ந்து இருக்கும் போது 40, இளமைப் பருவத்தினருக்கு 75 முதல் 80, வாலிபப் பருவத்தினருக்கு 90, வயது முதிர்ந்த ஆணுக்கு 70 முதல் 75, அவர்கள் படுத்து இருக்கும் போது 67, வயது முதிர்ந்த பெண்களுக்கு 75 முதல் 80 என்று எண்ணிக்கை வேறுபாட்டை எவ்வளவு அழகாகக் கூறியுள்ளனர். இன்னும் எத்தனையோ இருக்கிறது நாடியைப் பற்றிக் கூறிக்கொண்டே போக.
இப்போது நாடித்துடிப்பைக் கண்டு நோய் அறிதல் அற்று போய் விட்டது என்றே கூற வேண்டும். மருத்துவரிடம் சென்றவுடன் நாடித்துடிப்பு பார்க்கும் காலம் மாறி ஸ்டெத் வந்தது. இப்போது அதற்கெல்லாம் கூட விடை கொடுத்தாகி விட்டது. எடுத்த எடுப்பிலேயே ஸ்கேன் என்ற நிலையில் பழகிவிட்டனர் மருத்துவர்கள். என்பது ஒருபுறம். மறுபுறம் நவ நாகரிக மக்களின் பணத்தை நாடும், பகட்டை நாடும், பேரை நாடும், புகழை நாடும் பேராசை அவர்களை நாடி ஜோசியத்தை நாட வைத்துள்ளது. என்ன செய்தால் கோடிஸ்வரன் ஆகலாம என்ற ஆவல் நாடி ஜோசியத்தின் பக்கம் திசை திருப்பி விட்டுள்ளது. இந்த நம்மையே எண்ணி நமக்காகவே துடிக்கும் நாடியைப் பற்றி எவரும் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை.